Thursday, 31 July 2025

தீக்கதிர் 01.08.2025

எஸ்.கவிவர்மன் மீது கொலை மிரட்டல் விடும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

மக்கள் போராளி எஸ். கவிவர்மன் மீது கொலை மிரட்டல் விடுத்துள்ள காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ். ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன், சிஐடியு நிர்வாகி எம்.ஏ.ரகுமான் ஆகியோர் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிேக் குப்தாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை அறந்தாங்கியில் நடைபெற்றது. இந்த மாநாட்டு பேரணியை வாழ்த்திப் பேசுவதற்காக எங்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான எஸ்.கவிவர்மன் சென்றுள்ள்ளார். வாழ்த்திப் பேசிவிட்டு, பேரணியில் சிறிது தூரம் நடந்து சென்ற எஸ்.கவிவர்மன்; அருகில் சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த தனது காரை எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் இருந்த காவலர், கவிவர்மனைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி “வண்டியை எடுய்யா” என்று ஒருமையில் பேசியுள்ளார். ஒரமாக நிற்கும் வண்டியை எடுக்கத்தான் வருகிறேன் சார் என்று என்று கவிவர்மன் கூறியதற்கு, “நீ என்ன பெரிய மயிரா” எனக் கூறி கவிவர்மனின் செல்போனையும் பறித்துள்ளார். மேலும், தான் ஓட்டிவந்த டாட்டா சுமோ ரோந்து வாகனத்தை அவர் மீது ஏற்றி கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும், கட்சியினரும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்ததோடு, தகராறு செய்த காவலர் ராஜசேகரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். மேலும், பணியிட அவரை மாறுதலும் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காவலர் ராஜசேகர், கவிவர்மனையும், அவரது மனைவியையும் தொலைபேசியில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அவரின் போனை எடுக்காமல் இருந்தால், வேறுவேறு எண்ணில் இருந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எந்த நேரமும் களத்தில் நின்று மக்களுக்காக போராடி வரும் எங்கள் கட்சியின் தலைவர் எஸ்.கவிவர்மன் மீது, காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே கொலை மிரட்டல் விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.எனவே, தவறுமேல், தவறு செய்துவரும் காவலர் ராஜசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தெரிவித்துள்ளார்.